*5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளும் சிறுவர்களின் மனநலமும்.*
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும் நல்ல விடயம்.
ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
சித்தியடையாத பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.
இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.
அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.
குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.
*குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*
அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9



No comments:
Post a Comment